Wednesday, April 1, 2009

தரும(மற்ற) புரி - நாங்களும் ரவுடிதாண்டா!

·

ஈகைத்தருமம் நிறைந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சிசெய்த பகுதிகளை உள்ளடக்கியது இன்றைய தருமபுரி மாவட்டம் என்று நாம் படித்திருப்போம். நான் அங்கு படித்த ஓரிரு வருடங்களில் தருமபுரி நகரம் தருமம் நிறைந்த நகரமா என்பதை அறிய முடியாவிட்டாலும் அது ஒரு ரவுடிகள் நிறைந்த இடம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வீட்டுக்கொரு ரவுடி என்ற பாரம்பரியத்தைக் கொண்டது அந்நகரம். நெசவாளர் காலனி முனுசாமி, வென்னாம்பட்டி ரவி, பள்ளித்தெரு ராஜா, பஸ்டாண்டு ரசாக், டி.ஆர் -ஐ தாக்கிய எஸ்.ஆர், ஸ்டேடியம் ஜிம் குமார், என்று பலர் அங்கு ரவுடிப் பள்ளிகள் நடத்தி சேவை செய்து வந்தனர். அரசியல் ரவுடிகளை விட சுயேச்சை ரவுடிகளுக்கு நல்ல மவுசு இருந்தது. இவர்கள் தவிர காக்கி உடையில் பல ரவுடிகள் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் இருந்தார்கள்.

இவர்களில் ஜிம் குமார் தான் எனது ஜிம் மாஸ்டர். பள்ளித்தெரு ராஜா -வுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. இவர்கள் தவிர ஆராயி என்ற பொம்பள ரவுடி ஒருவர் ரயில்வே ஸ்டேசன் அருகில் இருந்தார். வெகு குறுகிய காலமே இவர் அப்பகுதியை ஆட்சி செய்தார். திடீரென ஒருநாள் அவர் காணாமல் போய்விட்டார். ரொம்ப கவர்ச்சியான ரவுடியாகிய இவருக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் பணம் கறப்பதுதான் முக்கிய தொழில். இரவு ஒன்பது மணியானதும் ரயில்வே ஸ்டேசன் சாலையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சிலம்பம் பயிற்சி செய்வார். சேலையை வேட்டிபோல் மடித்து கட்டிக்கொண்டு ஓரிரு அல்லக்கைகளுக்கு கற்றுத்தருவார்.

ஒருமுறை சில ஆந்திரா மாணவர்கள் ஆராயியிடம் மாட்டிக்கொண்டனர். பணம் பறித்துக்கொண்டு சிலர் கன்னத்தில் அறையும் கொடுத்திருக்கிறார். அவர்களில் கொஞ்சம் தைரியமான மாணவர் ஒருவர் "உன் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். உடனே கோபத்தின் உச்ச்சிக்கே போய்விட்ட ஆராயி தன் மார்பை திறந்து காட்டி இருபுறத்திலும் பச்சை குத்தியிருந்த தன் பெயரை பார்த்து படித்துக்கொள் என்று சொல்லிவிட்டாராம். பார்த்து பயந்துபோய் அலறிவிட்டார்கள் அம்மாணவர்கள். ஒரு துடுக்கான மாணவர் தனக்கு தமிழ் சரியாக படிக்கத்தெரியாது என்றும் அதனால் பொறுமையாக பார்த்து படித்து பெயரை தெரிந்து கொள்வதற்காக இன்னொருமுறை திறந்து காட்டச்சொல்லி கேட்டிருக்கிறார். செமைக்கடுப்பான ஆராயி அவரை அடித்து துவைத்துவிட்டார்.


பெரும்பாலும் போலீஸ்காரர்களுக்கு உற்ற தோழர்களாகத்தான் ரவுடிகள் இருப்பார்கள் என்பது உலக வழக்கு. ஆச்சர்யமான ஒருவிசயம் என்னவென்றால் போலீஸ்காரர்களுக்கும் பள்ளித்தெரு ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தும். மனிதர்களில் வேறுபாடு பாராட்டாமல் எல்லோரையும் ஒரே விதமாக மொக்கை போடும் இவரது இயல்பு தான் அதற்கு காரணம். போலீஸ்காரர்கள் இவரது தலையைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

அரசு மருத்துவமனைக்கு பின்னால் ஒருபகுதியில் நான் எனது கல்லூரி நண்பர்களுடன் தங்கி இருந்த சமயத்தில் ரயிலடித் தெருவில் ஒரு சூதாட்ட கிளப் இருந்தது. காலையில் இருந்து மாலை ஆறுமணிவரை சீட்டாடிய களைப்பில் நம்ம பள்ளித்தெரு ராஜா கிளப்புக்கு வெளியே ஒருமணிநேரம் ரெஸ்ட் எடுப்பார். ஆறுமணி வாக்கில் நான் வீட்டுக்கு வரும்போது என்னைப் பிடித்துவைத்து ஒருமணிநேரம் மொக்கை போட்டுவிட்டுத்தான் அடுத்த இரவு ரவுண்டுக்கு சீட்டாட செல்வார். அதேபோல் காலையில் ஒன்பது மணிக்கும் ஒரு மொக்கை உண்டு.

அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு காலையில் ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலையை ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் செய்துவந்தார். மகா வெகுளியான அந்தப் பெண் குண்டலப்பட்டியிலிருந்து காலையில் தருமபுரி வந்து அப்பகுதியில் இருந்த சுமார் முப்பது கடைகளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்துவிட்டு மாலைவரை வேறெங்கோ வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வார். அந்த சீட்டாட்ட கிளப்புக்கும் அவர்தான் தண்ணீர் பிடித்து வைப்பார். அரசு மருத்துவமனையில் அச்சமயம் பணியாற்றி வந்த கண்ணன் என்ற ஆப்டீசியன் அந்த கிளப்பில் சீட்டாடி பணத்தை விடுவது வழக்கம். தண்ணீர் வைக்க அந்த பெண் கிளப்புக்கு சென்றால் அவ்வப்போது அவரிடம் சில்மிஷம் செய்யும் வேலையை இவர் நெடுநாளாக செய்து வந்திருக்கிறார். நம்ம ராஜா அங்கு இல்லாவிட்டால் கண்ணனுடன் சேர்ந்து சில மைனர் குஞ்சுகள் அப்பெண்ணை அலரவைப்பார்கள். இதனால் அப்பெண் தினமும் என்னிடம் வந்து ராஜா கிளப்புக்கு வந்துவிட்டாரா என்று கேட்டுவிட்டுத்தான் அங்கு தண்ணீர் வைக்க செல்வார். சமயங்களில் வெகுநேரமாகியும் ராஜா அங்கு வந்திருக்க மாட்டார். அந்நாட்களில் அப்பெண் பயந்து பயந்து அங்கு சென்று வருவார். எனக்கு எப்போதும் காலை வகுப்புகள் அரசு மருத்துவ மனையிலும் மாலை வகுப்புகள் பெரியாம்பட்டி கல்லூரியிலும் நடக்கும். காலை வகுப்புகளை பெரும்பாலும் கட் அடித்துவிட்டு கிளப்புக்கு எதிரில் இருக்கும் எங்கள் வாடிக்கையான செட்டிநாடு மெஸ்ஸில் ஆச்சியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பேன். இதனால் கிளப் சங்கதிகளும் அப்பெண் பற்றியும் எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.

அப்பகுதியில் இருத்த ஒரு ஜவுளிகடையில் புதிதாக ஒரு டைலர் வந்திருந்தார். வெகு அபூர்வமாக பேசுவார். அவரை பார்த்தாலே நோன்ஜான்களுக்குக் கூட அடித்து பணம் பிடுங்கத்தோன்றும். சவுத் -இலிருந்து வந்தவராம். அநாதை என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட மனிதர் திடீரென்று ஒருநாளில் இருந்து எங்கள் மெஸ்சுக்கு காலையில் வந்து என்னை தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டுப் போகும் வழக்கத்தை மேற்கொண்டார். இது எனக்கு வினோதமாக தோன்றினாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் அவரை கேட்கவில்லை. அவரும் அதற்குமேல் எதுவும் பேசமாட்டார்.

ஒருமுறை ஜி.எம் தியேட்டருக்கு நண்பர்கள் ஏழெட்டு பேராக இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல முதல் அரைமணி நேரத்திலேயே நான் மட்டும் தனியாக வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தியேட்டரில் இருந்து யாரோ என்னை தொடர்ந்து வருவதுபோல் தோன்றினாலும் வீட்டுக்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன். அந்த டைலர் என்னை தொடர்ந்து வந்து அருகில் நெருங்கினார். முகம் உப்பியிருந்தது. நிறைய அழுதிருப்பார் போல இருந்தது. "என்னங்க ஆயிற்று, என்ன விஷயம், ஏன் என்னை தொடர்கிறீர்கள் என்று கேட்டேன்?" பொலபொலவென அழ ஆரம்பித்த அந்த டைலர் தன் மனைவியின் தாலியை ஆப்டீசியன் கண்ணன் பறித்துக் கொண்டதாகவும் மேலும் தன் மனைவியின் சீலையை அவிழ்த்து அவமானப் படுத்தியுதாகவும் சொன்னார். நான் கண்ணனுடன் மருத்துவமையில் பணிபுரிவதாக நினைத்து என்னிடம் சொன்னார் போலிருக்கு. எனினும் அவர் இந்த விசயத்தைச் சொன்னவுடன் எனக்கு கோபத்தில் தலை பாரமாகிவிட்டது. வெறியில் பற்கள் இறுகின. கண்ணனின் கதையை இன்றோடு முடமாக்குவது என்று முடிவெடுத்தேன். சினிமா விட்டு நண்பர்கள் வருவதற்குள் இதை சமயோசிதமாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன்.

எனது பைக்கில் அவரை அழைத்துக் கொண்டு நேராக பள்ளித் தெருவுக்குப் போனேன். ராஜா இந்நேரம் குடித்துவிட்டு தன்னிலை மறந்து இருப்பாரென்று நன்றாக தெரியும். அவரை அணுகுவது ஆபத்தானதும் கூட. போகும் வழியில் அவரிடம் மீதிக்கதையைக் கேட்டுக்கொண்டேன். அந்த தண்ணீர் எடுத்து வைக்கும் பெண்ணை இவர் சில நாட்களுக்கு முன்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். என்னைப் பற்றி அந்த பெண் நல்லவிதமாக அவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தினமும் காலையில் ஏன் என்னை தேடி வந்து அவர் வணக்கம் வைத்துவிட்டு செல்கிறார் என்று புரிந்தது.

பயங்கர மப்பில் இருந்தாலும் ராஜா என்னைப் பார்த்ததும் "வாடா, இங்க என்ன பண்ற? இவன் யாரு?" என்றார். நான் விசயத்தை முழு மூச்சில் ஆவேசத்துடன் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. வழக்கமான மொக்கையுடன் போதையில் வேறு ஏதோ பேச ஆரம்பித்தார். கடுப்பாக இருந்தாலும் பத்துநிமிடம் குறுக்கே எதுவும் பேசாமல் பொறுமையாக மொக்கையை கேட்டேன். இதற்குமேல் இங்கே வேலையாகாது என்று நினைத்து "அண்ணே! வந்து..." என்று அரைமனதுடன் மீண்டும் விஷயத்தை ஆரம்பித்தேன். இருந்தாற்போல் இருந்து திடீரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "அதான் சொல்லிட்டல்ல, திரும்ப எதுக்குடா சொல்ற!" என்று முறைத்தார். பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; "வண்டியை எடுடா என்று கூறி" பின்னால் அமர்ந்து கொண்டார். "அண்ணே அவரும் என்கூட வந்தாருக்காரு, வண்டியில அவரும் வரட்டும்னே!" என்றேன். "அவன் எதுக்குடா?" என்றார். "என்னது, அவன் எதுக்கா! அவருக்குக்காகத்தானே உன்னையே பாக்க வந்தேன்!" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் கதையை அவருக்கு சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தேன். நான் திரும்ப சொல்வது மொக்கை போல் தெரிந்தது போலிருக்கு அவருக்கு. "சரி சரி அவனையும் ஏறச்சொல்லு! என்றார்.

கண்ணன் வீட்டில் வண்டியை நிறுத்தியதும் "நீ வீட்டுக்கு போ, நான் அப்பறமா வரேன்" என்று சொல்லிவிட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் ஏதாவது செய்வார் என்று கூட்டிவந்தால் இவர் அவனுடன் சேர்ந்து சீட்டாட வந்தவர் போல் கூலாக என்னை போகச்சொல்லுகிறாரே என்று ஏமாற்றமாக இருந்தது. கயவர்கள் பற்றி கலைஞரிடம் மக்கள் முறையிட்டால் அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து வெறுப்பேற்றுவது போல அந்த சூழல் இருந்தது. அங்கேயே நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவனுடன் சேர்ந்து வெளியே வந்தார். கண்ணன் சிரித்த முகத்துடன் வந்தான். டைலாரைப் பார்த்ததும் நக்கலாக "என்னடா, இங்க என்ன பண்ற? கட்டச்சி வீட்ல இருக்காளா? வா அவள பார்க்க போவோம்" என்றான். நான் அவரைப் பார்த்தேன். அவரது கண்ணில் பயம் தொற்றிக் கொண்டது. அவர் வீட்டிற்கு ஓட ஆரம்பித்தார். எதுவும் பேசாமல் இருந்த ராஜா எட்டி அவர் சட்டையை பிடித்தார்.

"ஆஹா நிலைமை வேறுமாதிரியாகப் போகிறதே" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஒரு புதிய திட்டத்தை வகுத்தேன். நண்பர்களை இப்போது அழைக்க நேரமில்லை. போதையில் இருக்கும் ராஜா மற்றும் கண்ணனை இந்த டைலர் தனியாக சமாளிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சமாளித்தாக வேண்டும் என நினைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடந்தேன். டைலரின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டு ராஜா முன்னாள் நடந்தார். கண்ணன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

மெலிதாக எரியும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அந்தப்பெண் மூலையில் படுத்திருந்தார். கண்ணனும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர். பின்னால் நானும் டைலரும் திகிலுடன் சென்றோம். ராஜாவுக்கு உள்ளே சரியாக எதுவும் தெரியவில்லை போல. "யேய்!!" என்று கத்தினார். ராஜாவுடன் கண்ணனைப் பார்த்ததும் அந்தப் பெண் வீல் வீல் என அலற ஆரம்பித்தார். எனக்கு அது பலியாட்டின் கனைப்பை போல் அபாயமாகத் தோன்றியது. டைலரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார். இனியும் தாமதிக்க முடியாது என்றெண்ணி இருவரையும் விளக்கிவிட்டு ஒரே ஓட்டமாக அப்பெண்ணை நெருங்கினேன். என்னைப்பார்த்ததும் கன நேரத்தில் ஓடிவந்து என் பின்னால் நின்றுகொண்டார். என் சட்டையை பின்புறமாக கொத்தாக பிடித்துக்கொண்டு "அண்ணா காப்பாத்துங்கண்ணா, காப்பாத்துங்கண்ணா!" என்று பதற ஆரம்பித்தார். ஈழக் கொடுமைகள் தொடர்பான வீடியோவில் பள்ளிச்சிறுமிகள் போர் விமானங்களைக் கண்டு வீறிட்டு அலறும்போது நமக்கு எப்படி மனம் பதைபதைக்குமோ அதுபோன்ற பதைப்பு எனக்கு அப்போது ஏற்பட்டது. இனி உயிரே போனாலும் இப்பெண்ணை எவனும் தொட அனுமதிக்கக் கூடாது என்று முடுவேடுத்தேன். அவரது உதறல் எனக்கு எச்சரிக்கை உணர்வையும் ஆவேசத்தையும் வரவழைத்துவிட்டது. அப்பெண்ணை ஒரு மூலைக்கு நகர்த்தி அரணாக நின்றுகொண்டேன்.

தான் அப்பெண்ணை தாக்கப்போவதாக நான் நினைக்கிறேனென்று ராஜா புரிந்து கொண்டார். போதையும் தெளிந்திருந்தது. "நீ ஏன்டா பேயறைந்த மாதிரி நிக்கிற" என்று என்னைப் பார்த்து சொன்னவாறே கண்ணன் தலையில் ஒரு எத்து எத்தினார். முடியை கொத்தாக பிடித்து இழுத்துவந்து அப்பெண்ணின் காலருகே அவனை கிடத்தினார். அப்பெண் இப்போது என் பின்னாலிருந்து வெளியே வந்து என் கையைப் இருகப்பற்றிக்கொண்டார். ராஜா எத்த காலை தூக்கியதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு மீண்டும் அப்பெண்ணின் காலில் விழுந்தான் கண்ணன். "எங்கடா அந்த தாலி?" என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த அரைப்பவுன் தாலியை பாக்கேட்டிலிருந்து அப்பெண்ணின் காலுக்கடியில் வைத்தான் கண்ணன். பிறகு எங்கள் மூவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு கதவை சாத்தி அரைமணிநேரம் கண்ணனை அடித்தார். பிறகுதான் சற்று நிம்மதியாய் இருந்தது.

ஒருவழியாக வெளியே வந்த ராஜா வண்டி சாவியை கேட்டார். பள்ளித்தேருவுக்குப் போன எந்த வண்டியும் திரும்ப வராது என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றாலும் எதுவும் பேசாமல் சாவியை கொடுத்தேன். திரும்பவும் கண்ணனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கோ போனார். இன்னமும் திகில் விலகாத இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனேன். உடனடியாக ஆச்சிக்கு போன் செய்து செட்டியாருக்கு தெரியாமல் ஒருநிமிடம் வந்துபோகும்படி சொன்னேன்.

அவர் வந்ததும் நான் சுருக்கமாக சொன்ன அந்த கதையைக் கேட்டு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். "உனக்கென்ன பயித்தியமா, இதெல்லாம் உனக்கு தேவையா?" என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டார். பின்னாலே செட்டியாரும் வந்துவிட அவருக்கு ஆச்சியே அவரது வெர்சன் கதையை சொல்ல ஆரம்பித்தார். ராஜா எடுத்துச் சென்ற வண்டிக்காக செட்டியார் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே விஷயம் தெரிந்து நண்பர்கள் தியேட்டரில் இருந்து வந்துவிட்டனர். "நாமே கண்ணனை துவைச்சி தொங்கப் போட்டிருக்கலாம், ராஜாவை கூப்பிட்டு பிரச்சினையை ஏன் பெரிசு பண்ணின?" என்று நண்பர்கள் பேச ஆரம்பித்தனர். ("அடப்பாவிகளா! நல்லது நினைச்சி ஏதாவது செஞ்சா ஏண்டா திட்டறிங்க !") கொஞ்ச நேரத்தில் கண்ணன் வண்டியை எடுத்துவந்து வீட்டில் பார்க் செய்துவிட்டு, சைடு லாக் போட்டுவிட்டு சாவியை வெளியிலிருந்தே வீசிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். ராஜா சொல்லி அனுப்பி இருப்பார் போலிருக்கு.

சிறிது நேரத்தில் அனைவரும் என்னை கும்முவதை நிறுத்திவிட்டு அவ்விருவரையும் தேற்ற ஆரம்பித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டதை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டனர். செட்டியார் தனது ஆதிகாலத்து மகிந்திரா வேனை எடுத்துக்கொண்டு வந்தார். அனைவரும் தொபபூர் பஞ்சாபி தாபா சென்று அவர்களுக்கு திருமண விருந்தைக் கொடுத்தோம். பிறகு வேனில் ஏற்றி இருவரையும் குண்டலபட்டி அனுப்பிவைத்தோம். கடைசியாக வேனில் ஏறும்போது அப்பெண் என்னிடம் அவரது பாட்டி மீன் குழம்பு நன்றாக செய்வார் என்றும் குண்டலப்பட்டி ஒருமுறை நான் வரவேண்டும் என்றும் சொன்னார். டைலர் வழக்கம்போல் "வணக்கம் சார்" என்று மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறிக்கொண்டார்.

எனக்கு சீ ஃபுட் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்று நான் அப்பெண்ணிடம் ஏனோ சொல்லவில்லை.

12 comments:

யூர்கன் க்ருகியர் said...
April 1, 2009 at 2:27 AM  

:)

பொன்.பாரதிராஜா said...
April 1, 2009 at 4:25 AM  

மோகன்,நானும் தர்மபுரியில் தான் படித்தேன்...அத்தனை அனுபவங்களும் எனக்கும் உண்டு.. நாங்க படிக்கும்போது Dr.செல்வம் தான் பெரிய ரவுடி..இப்போ இருக்கானா அவன்?

Anonymous said...
April 1, 2009 at 7:05 AM  

//ஒருவழியாக வெளியே வந்த ராஜா வண்டி சாவியை கேட்டார். பள்ளித்தேருவுக்குப் போன எந்த வண்டியும் திரும்ப வராது என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றாலும் எதுவும் பேசாமல் சாவியை கொடுத்தேன்//

சூப்பர் அண்ணே... நானும் தருமபுரி தான்... நீங்கள் சொல்வதெல்லாம் சிட்டி லிமிட்க்குள்ள தான். இன்னும் கூத்து எல்லாம் கிராமங்களில் பாக்கலாம்... எல்ல கிராமங்களிலும் காட்ட பஞ்சாயத்து உண்டு. " ஊர் கவுண்டர் " இருப்பார். மத்த சாதி காரங்க கிடச்ச போட்சி ( அதாவது "டாக்டர் ராமதாஸ் ஐயா வின் வன்னியர் சாதி காரங்களா தவிர மத்த சாதி காரங்க மாட்டுனா அவ்ளோ தான். அவங்கள அம்மா , அத்தா னு திட்டி முடிஞ்ச வரை பணத்தை கறந்துடுவாங்க... என்ன தான் பழகினாலும் "சாதி" னு வாரப்ப தன்னுடையா சாதி காரன் பக்கம் நின்னு பாங்கா... ரொம்ப நன்றி உள்ளவங்க... இத விட கேவலம் பள்ளி கூடம் வத்தியார், படிச்சவங்க கூட முதல்ல சாதி தான் பாப்பாங்க... ஜாதி ஊட்டிய ராமதாஸ் அவர்கள் கோட்டை தான் தருமபுரி.... வெறி வெறி ஜாதி வெறி பிடித்த ஊர் ....

Anonymous said...
April 1, 2009 at 7:34 AM  

தர்மபுரி பத்தி இன்னொரு உண்மை சம்பவம் :
மற்ற சாதி கார விவசாயு நிலத்தில் வாழை பலம் பழுத்திருந்தது. நன்றாக பழகியவன் ஒருவன் அந்த வாழை தாரை வெட்டி கொண்டு போய் அருகில் உள்ள கடையில் விற்று விட்டான். அந்த கடை காரனுக்கும் தெரியும் யாருடைய வாழை மர தார் என்று. வாங்கி கடை முன்னாள் தொங்க விட்டிருந்தான். காலையில் அந்த கடையில் தான் டீ குடிப்பார் அந்த விவசாயு. டீ கடைக்கு வந்தவர், தன் வாழை மர தாரை பார்த்தும் அதிர்ந்தார், கோவப்பட்டு கத்தினார்.
கடைகாரார் அமைதியா கேட்டுட்டு, அந்த வாழை தாரை வெட்டி கொண்டு வந்து விற்றவனை கூட்டி வந்தார். திருடியவன் கூல சொன்னான் " அப்பா இந்த வாழ தார் உன் வாழ தார் மாதிரி இருக்கு?. சரி எடுத்துட்டு போ. ஆனா உண் பொண்டாட்டி என் பொண்டாட்டி மாதிரி இருக்க... வா போலாம்... என் விட்டுக்கு அனுப்பி வை உன் பொண்டாடியை... என்று லாஜிக்க பேச .... அப்புறம் என்ன ?. அந்த விவசாயி வன்னியர் இல்ல வேற ஜாதி காரன் அதுனால வாழ தாரும் போச்சி ... அடி வாங்கி வேஷ்டி இல்லாம ஜட்டியோட ஓடினார் ...

இது உண்மை சம்பவம் கா ..... தமாசு இல்ல .... ஓடியவர் பெயர் "அருணாசலம்" .. ஊர் வேண்டாம் ப்ளீஸ் ... பாவம் அந்த மனுஷன் மீதி இருக்க மானமாவது மிஞ்சட்டும்

எட்வின் said...
April 4, 2009 at 11:43 PM  

நீங்க "பிசியோ" மோகன் தானா அப்போ... கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம்... அவர் தான இவருன்னு. நான் பத்மாவதி ல தான் Nursing படிச்சேன். வில்சன், பால், அருள் அவங்க ஜூனியர்.ஜனவரி ல செட்டிநாடு மெஸ் கு போயிருந்தேன். ஆச்சிய யும் செட்டியாரையும் பாத்து பேசிட்டு வந்தேன். தருமபுரி காட்டான் ஊரய்யா.

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:14 PM  

///Blogger ஜுர்கேன் க்ருகேர்///

வங்க க்ருகேர்! நலமா?

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:19 PM  

//மோகன்,நானும் தர்மபுரியில் தான் படித்தேன்...

அப்படியா? நல்லது! நான் பெரியாம்பட்டி கல்லூரியில் படித்தேன்!

///அத்தனை அனுபவங்களும் எனக்கும் உண்டு..///

ரொம்ப அட்டூழியம் அங்கே! வெளியூர்காரர்களுக்கு பாதுகாப்பற்ற ஊர் அது!

/// நாங்க படிக்கும்போது Dr.செல்வம் தான் பெரிய ரவுடி..இப்போ இருக்கானா அவன்?/////

இவனுங்களுக்கு ஊரைத்தாண்டினா நாயடி விழக்கூடும், கழுத கெட்டா குட்டிச் செவுரு! அங்கேதான் இருப்பானுங்க!! :-)))

வருகைக்கு நன்றி பாரதி ராஜா!

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:23 PM  

////சூப்பர் அண்ணே... நானும் தருமபுரி தான்... நீங்கள் சொல்வதெல்லாம் சிட்டி லிமிட்க்குள்ள தான். இன்னும் கூத்து எல்லாம் கிராமங்களில் பாக்கலாம்... எல்ல கிராமங்களிலும் காட்ட பஞ்சாயத்து உண்டு. " ஊர் கவுண்டர் " இருப்பார். மத்த சாதி காரங்க கிடச்ச போட்சி ( அதாவது "டாக்டர் ராமதாஸ் ஐயா வின் வன்னியர் சாதி காரங்களா தவிர மத்த சாதி காரங்க மாட்டுனா அவ்ளோ தான். அவங்கள அம்மா , அத்தா னு திட்டி முடிஞ்ச வரை பணத்தை கறந்துடுவாங்க... என்ன தான் பழகினாலும் "சாதி" னு வாரப்ப தன்னுடையா சாதி காரன் பக்கம் நின்னு பாங்கா... ரொம்ப நன்றி உள்ளவங்க... இத விட கேவலம் பள்ளி கூடம் வத்தியார், படிச்சவங்க கூட முதல்ல சாதி தான் பாப்பாங்க... ஜாதி ஊட்டிய ராமதாஸ் அவர்கள் கோட்டை தான் தருமபுரி.... வெறி வெறி ஜாதி வெறி பிடித்த ஊர் ....///

நீங்கள் சொல்வது மிகமிக சரி! எவனிடம் பேசினாலும் எனக்கு ஜி கெ மணியை தெரியும். அவரிடம் சொல்லி மேட்டர் முடிச்சிடலாம் என்றுதான் பேசுவானுங்க! அவருக்கேன்னவோ இதுதான் வேலை என்பதுபோல். சாதிவெறி மிக்கவர்கள் என்பது நூறு சதம் உண்மை!!

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:27 PM  

////அந்த விவசாயி வன்னியர் இல்ல வேற ஜாதி காரன் அதுனால வாழ தாரும் போச்சி ... அடி வாங்கி வேஷ்டி இல்லாம ஜட்டியோட ஓடினார் ...

இது உண்மை சம்பவம் கா ..... தமாசு இல்ல .... ஓடியவர் பெயர் "அருணாசலம்" .. ஊர் வேண்டாம் ப்ளீஸ் ... பாவம் அந்த மனுஷன் மீதி இருக்க மானமாவது மிஞ்சட்டும்////

இதுபோல் அரை நிர்வாணத்துடன் ஆட்களை துரத்துவது, குற்றுயிராய் ட்ராக்கில் வெட்டிப்போடுவது, வீடு புகுந்து உதைப்பது, ஆட்டோவில் வைத்து கும்முவது என தினமும் ஏதாவது ஒரு கூத்து காணக்கிடைக்கும் ஊர் அது. நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு பல சம்பவங்களை நியாபகப்படுத்துகிறது.

மோகன் கந்தசாமி said...
April 5, 2009 at 10:32 PM  

////நீங்க "பிசியோ" மோகன் தானா அப்போ... கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம்... அவர் தான இவருன்னு.////

வாங்க எட்வின்!! நானே தான் அது! நலமா?

//// நான் பத்மாவதி ல தான் Nursing படிச்சேன். வில்சன், பால், அருள் அவங்க ஜூனியர்./////

இப்போது எங்கிருக்கிறீர்கள்? ஓமனிலா? உங்களை இணையத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

////ஜனவரி ல செட்டிநாடு மெஸ் கு போயிருந்தேன். ஆச்சிய யும் செட்டியாரையும் பாத்து பேசிட்டு வந்தேன்..///

அவர்கள் நலமாக இருக்கிறார்களா? நானும் ஒருமுறை செல்லவேண்டும்! மணி ஒருமுறை தொலை பேசியிருந்தான்!

/// தருமபுரி காட்டான் ஊரய்யா///

ஐயோ! கொடுமையான ஊர்!

எட்வின் said...
April 7, 2009 at 12:35 AM  

ஆமாம் இப்போ ஓமனில் தான் இருக்கிறேன். உங்களை இணையத்தில் பார்த்ததிலும் மகிழ்ச்சி

தீபக் வாசுதேவன் said...
June 10, 2009 at 2:29 AM  

>>போலீஸ்காரர்கள் இவரது தலையைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

இதற்கு தான் அரசு சம்பளம் வாங்குகின்றனரா? ரவுடி பயல நாலு அப்பு அப்பி ஸ்டேஷன் கொண்டு போய் லாடம் கட்டரடாத விட்டு விட்டு அவனுங்களுக்கே வெக்கமா இருக்காது?