Sunday, October 26, 2008

நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு

·

ஒக்கேனக்கல் பிரச்சினை போல் ஈழப்பிரச்சினையிலும் கலைஞர் பல்டி அடிப்பார் என ஏனோ என்னுள் ஒரு பட்சி கூறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால் கலைஞரின் நிலைப்பாட்டை நாராய் கிழித்து எனது பதிவில் தொங்கவிடும் எண்ணத்தில் இதுவரை ஈழம் தொடர்பாக பதிவெதுவும் எழுதாமல் இருந்தேன்.

"அடடடா! கந்தசாமியின் கொசுக்கடி தாங்கலடா!" என குமுறும் நண்பர்களே! அவசரப்படாதீர்கள், இன்றைய பதிவு பேசும் விசயத்திற்கு இன்னும் ஓரிரு வரிகளுக்குள் வந்து விடுகிறேன்.

இந்நிலையில் ஈழம் தொடர்பான எனது கேள்விகளுக்கு தமிழ் சசி பதிலளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, பதிவுலக இண்டலக்சுவல்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளேன்.

இதற்கிடையே, நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் அழைப்பை ஏற்று சினிமா தொடர் கேள்வி பதிலை இப்பதிவில் எழுதுகிறேன். "குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன்" என்று கூறும் சுந்தர் வாரம் ஒருமுறையாவது சினிமா பார்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். நானும் அப்படியே. எனினும் நான் இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில் ஒரு இருபது சத படங்களை மட்டுமே மூன்றுமணி நேரம் தொடர்ந்து பார்த்துள்ளேன். பெரும்பாலானவை கமலஹாசன் படங்களே!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


பத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். கமலஹாசன் படங்கள் என்றால் முதல் நாள் முதல் சோ -தான் எப்போதும். ஆனால் தசாவதாரம் பிரிவியூ சோ பார்த்தேன். டிக்கெட் கிழித்து தந்த குஜராத்தியுடன் ஸ்டூடண்ட் ஆபருக்கான வாக்குவாதத்தில் முதல் பத்து நிமிடங்கள் படத்தை தவற விட்டேன். படம் முடியும் முன்பாக எழுந்து சென்று பாக்ஸ் ஆபிசில் மீண்டும் சண்டை, அடுத்த சோ விற்க்காக டிக்கட் எனக்கு வழங்குமாறு.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பம்மல் சம்பந்தம். டீவிடி வைத்துள்ளேன். நகைச்சுவை படங்களிலும் மனதை உருக்கும் காட்சிகளை சீரியஸ் கெடாமல் வைக்க கமலகாசனால்தான் முடியும். 'ஏண்டி சூடாமணி' பாடல் ஒரு ஒப்பாரி வகைப்ப்பாடலாகும். கானா பாடல்களை விரும்பி கேட்பேன். புளியந்தோப்பு பழனியுடன் எனக்கு பழக்கம் உண்டு.

4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மகாநதி. ஆற்றாமையால் கமலகாசன் அழும் காட்சிகளிலெல்லாம் நானும் அழுதேன். நான் முழுமையாக பார்த்த படங்களில் அழாமல் பார்த்த படங்கள் மிகக்குறைவு. சோகக்காட்சிகளில் மட்டுமின்றி, தத்ரூபமான காட்சிகள், நிதர்சனங்களை சொல்லும் காட்சிகள், பெற்றோர் உதாசீனப்படுத்தப்படும் காட்சிகள், குழந்தைகள் இயல்பாய் நடிக்கும் காட்சிகள், ஆண்டான் அடிமை காட்சிகள், நவீன நிலபிரபுக்கள் விட்டேந்தியாக நடக்கும் காட்சிகள் என பல சமயங்களில் அழுவேன்.

5. உங்களை மிகவும் தாக்கிய அரசியல் சம்பவம்?

அண்ணாமலை படத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தபோது, ரசிகர் ஒருவர் தீக்குளித்ததாக வந்த செய்தி பகீரென்றிருந்தது. பிறகு, ரஜினி ரசிகர்களின் பல கிறுக்குத்தனங்களை கேள்விபடுகையில் சகஜமாகிப்போனது.

6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

குருதிப்புனல் திரைப்படத்திற்கு டிக்கட் கிடைக்காமல் செங்கல்பட்டு சென்று பார்த்தேன். அதில் அவிட் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் என அறிந்து அதுபற்றி செய்தி சேகரித்துக்கொண்டு பிறகு உன்னிப்பாக படத்தை பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.

7. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

விகடன், குமுதம் இதழ்களில் உள்ள சினிமா செய்திகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவற்றில் உள்ளவை எல்லாம், கிசு கிசு, வரவிருக்கும் படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் வித்தியாசமான படம் என்று தாடியை சொரிந்து கொண்டு எந்த டைரக்டராவது தரும் பேட்டிகள் என இவைதான் இருக்கும். 'திரை' என்ற இதழை நான் சென்னையில் இருக்கும்போது படிப்பதுண்டு. ஏனைய சிறுபத்திரிக்கைகள் போல் இவற்றிற்கும் நான் சந்தா பெறாத காரணத்தால் அவ்விதழை ஏரியா ஏரியாவாக தேடியலைந்து வாங்குவதே சுவாரசியமான அனுபவம்தான்.

8. தமிழ்ச்சினிமா இசை?

கமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா?", "மூங்கில் காடுகளே!, வண்டு முனகும் பாடல்களே!", "ஆழ்வார்பேட்டை ஆண்டவா", "வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு", கொஞ்சநாள் பொறு தலைவா", "மாஞ்சோலை கிளிதானோ", "செந்தூர் முருகன் கோவிலிலே", "இன்பம் பொங்கும் வெண்ணிலா", "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.

9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாள படங்களை தொலைகாட்சியில் நடுவிலிருந்து பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிகள் எனக்கு தெரியாததாலும் சப்-டைட்டில்கள் கிடைக்காது என்பதாலும் மெனக்கிடுவதில்லை. பிரபலமான படங்களை அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சில பெங்காலி படங்களை பார்த்ததுண்டு. பதேர் பாஞ்சாலி, மகாபுருஷ், பிரதிவண்டி போன்றவை. பொல்லாதவன் திரைப்படம் பை சய்க்கில் தீவ்சின் ரீஜிநலைஸ்ட் வடிவம் ஆகும். கிட்டத்தட்ட, அல் பசினோ வின் அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். சென்ட் ஆப் வுமன் எனக்கு பிடித்த ஒன்று. தவிர, எ ப்வ்யு குட் மென், ஸ்லீப்பிங் வித் எனிமி, ரெசர்வாயர் டாக்ஸ், ப்யூட்டிபுல் மைன்ட், பிரட்டி வுமன், டான்சிங் வித் உல்வ்ஸ் போன்றவற்றையும் முழுசாக பார்த்துள்ளேன். என் வழமைபோல், பல படங்களை பாதிக்குமேல் பார்ப்பதில்லை. பர்பக்ஸன் இருந்தாலே படம் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.

10. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நான் பவித்ரா மருத்துவமனையில் பணி புரிந்தபோது, வாரம் இருமுறையாவது அங்கு ஷூட்டிங் நடக்கும். டபுள்ஸ் பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் மருத்துவராக நடிக்க சொன்னார் பாண்டியராஜன். சங்கோஜத்தால் மறுத்தேன். நடிகை சங்கீதா (அப்போதைய பெயர் ரசிகா என நினைக்கிறேன்) என்னை என் புஜத்தில் ஒருமுறை கிள்ளினார். குஷ்பூவும் சரத்குமாரும் கட்டிப்பிடித்தபடிதான் எப்போதும் பேசிக்கொண்டனர். கூன் விழுந்த கிழவியான சிம்ரனை நேரில் பார்த்தபிறகு பிடிக்காமல் போய்விட்டது. பிரபு தேவாவுக்கும் மீனவுக்கும் லவ்ஸ் இருந்த சமயம் நாயினும் மோசமாக அவர் ஜோள்ளியது சகிக்க வில்லை. டைரக்டர் பாலா ஓங்கி ஒரு அறை விட்டால் செத்துவிடுவார் போல் இருந்தார். நடிகர் விக்னேஷ்வர் (பசும்பொன் ஹீரோ) லிப்டில் மாட்டிக்கொண்டு விழித்தார். தீனா படத்தில் முப்பது நொடி காட்சியில் நடிப்பதற்குள் அஜித் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக ரசிக தொல்லையில் சிக்கினார். குளுக்கோஸ் பாட்டிலை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு நோயாளி ஷூட்டிங் பார்க்க வந்தார். ஒரு சைனீஸ் துணை நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இவைதான் எனக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் உள்ள தொடர்பு. ஆக்கப்போர்வமானது என்று எதுவும் இல்லை. மறுபடியும் அம்மருத்தவனையில் பணி புரிய நேர்ந்தால் மீண்டும் இந்த சேவையை (:-)) திரைத்துறைக்கு செய்வேன்.



11. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில் நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும். மிஸ்கின், அமீர், பாலா, வெங்கட் பிரபு, விக்ரம், சினேகா, ஜீவா, வடிவேலு, கோவை சரளா, சந்தானம் போன்றோரால் தரத்திலும் மின்னும். விஜய் விரைவில் அரசியலுக்கு சென்று திரைவுலகை காப்பாற்றுவார். கமலகாசன் காலத்திலேயே இந்திய சினிமா என்றால் கோலிவுட் என்ற நிலை ஏற்பட்டு பாலிவுட் இரண்டாம் இடம் பெறும். இந்திய மொழிகளில் தமிழை மிகவும் விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.


12. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது. அதற்கு அடுத்த ஆண்டுமுதல் மீண்டும் வந்து மொக்கை போடத்தானே போகிறார்கள்!

பலபேர் நடுரோட்டுக்கு வந்துவிடக்கூடும், பெண்களின் ஆதிக்கத்திலிருந்து சீரியல்கள் விடுபடும். உட்கார்ந்து யோசித்தால் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.

8 comments:

நசரேயன் said...
October 26, 2008 at 2:45 PM  

தலைப்பை படுசுட்டுல்ல்லா வந்துட்டேன், இருந்தாலும் நல்ல இருக்கு

புதுகை.அப்துல்லா said...
October 26, 2008 at 4:17 PM  

நமக்கும் அழைப்பு வந்துச்சு. இன்னும் எழுதாம இருக்கேன்.... ஒரு காரணத்தோட சீக்கிரம் எழுதி விடுகிறேன்.

மோகன் கந்தசாமி said...
October 26, 2008 at 9:26 PM  

///தலைப்பை படுசுட்டுல்ல்லா வந்துட்டேன், ///

ஏமாந்துட்டிங்களா? சாரி.

மோகன் கந்தசாமி said...
October 26, 2008 at 9:27 PM  

////. இன்னும் எழுதாம இருக்கேன்.... ஒரு காரணத்தோட////

புரிகிறது நண்பா!

ஆ! இதழ்கள் said...
October 28, 2008 at 4:32 AM  

யோவ் நான் உமது பெயரை வாசித்து நல்லா எழுதுவாருன்னு வந்தா, மொக்கையோ மொக்கை. உமது சமீபத்திய (ஈழம் - கலைஞர்) இடுகை super.

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 6:27 AM  

இதழ்கள் சார்,

/// மொக்கையோ மொக்கை. ///

கட்டுரையின் உள்ளாடக்கம் அப்படி. சரி தலைப்பையாவது கில்மா வைக்கலாம்னு அப்படி வச்சேன்.

/// உமது சமீபத்திய (ஈழம் - கலைஞர்) இடுகை super.////

ஆஹா! எனிவே, நன்றி.

rapp said...
October 29, 2008 at 12:55 AM  

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்னமோ ஏதோ இருக்கும்னு ஜாலியா வந்து பாத்தா தலைப்புல இருக்கிற விஷயம் பதிவுல இல்ல:(:(:( உங்களை எங்க தலயோட அடுத்த படமான தளபதி பாக்க வெச்சாத்தான் சரிபடுவீங்க:):):)

மோகன் கந்தசாமி said...
October 29, 2008 at 6:37 AM  

/////கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்னமோ ஏதோ இருக்கும்னு ஜாலியா வந்து பாத்தா தலைப்புல இருக்கிற விஷயம் பதிவுல இல்ல://///

ஹி ஹி, ச்சும்மா ட்டமாஷுக்கு...