Showing posts with label அப்துல்லா. Show all posts
Showing posts with label அப்துல்லா. Show all posts

Tuesday, November 4, 2008

"ஈழப் பிரச்சினையை தீர்த்தது நான்தான்" - புதுகை அப்துல்லா

· 26 comments

"ச்சும்மா ட்டமாஷ்" மின்னிதழின் சென்னை நிருபர் மாலினி பார்த்தசாரதிக்கு திராவிட திலகம், பதிவர் திரு புதுகை அப்துல்லா அளித்த பேட்டி பதிவுலக நண்பர்களுக்காக இப்பதிவில் வெளியாகிறது.

மாலினி: வணக்கம், திரு புதுகை அப்துல்லா, உங்க பெயரே வித்தியாசமா இருக்கு, பெயர் காரணம் சொல்லுங்க!

புதுகை: வணக்கம் மாலினி அண்ணே! என் இயற்பெயர் கூட என் ஊர் பெயரையும் சேர்த்திருக்கேன் அண்ணே! அதான் என் பெயர் அப்படி இருக்கு.

மாலினி: அப்படியா? அப்துல்லா என்ற ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே! எந்த மாவட்டத்தில் இருக்கு?

புதுகை: அண்ணே! இந்த நக்கல் எல்லாம் 'ச்சும்மா ட்டமாஷோ' -ட நிறுத்திக்கணும், புரிஞ்சிதா! புதுகை ஊரு, அப்துல்லா பேரு!...ம் அடுத்த கேள்வி!

மாலினி: நீங்க ஏன்! எல்லோரையும் அண்ணே! அண்ணே! என அழைக்கிறீர்கள்?

புதுகை: தமிழ்மனத்தில் இருக்கிற எல்லாருக்கும் அது ஏன்னு தெரியும், உங்களுக்கு தெரியாதா?

மாலினி: அது தெரியும்! ஆனா என்னையும் அண்ணே -ன்னு கூப்பிடுறீங்களே! அது கொஞ்சம் ஓவரா தெரியலையா?

புதுகை: உங்கள மட்டும் இல்ல, பாரிஸ் பதிவர் ராப் -ஐ கூட அண்ணேன்னு தான் கூப்பிடுவேன், அவரும் என்னை தங்கச்சி -ன்னுதான் கூப்பிடுவார்.

மாலினி: !!!!!!!

புதுகை: என்னாண்ணே! பேஸ்த்தடிச்சு போய்ட்டிங்க! பயப்படாம அடுத்த கேள்விய கேளுங்க!

மாலினி: ஈழம் பிரச்சினைக்கு என்ன காரணம் -னு நீங்க நினைக்கிறீங்க?

புதுகை: தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. இதுதான் பிரச்சினை!

மாலினி: புதுகை சார்! உங்க பதில் எனக்கு புரியலைன்னாலும் பரவாயில்ல, படிக்கறவங்களுக்காவது புரிய வேணாமா? குழப்பாம சொல்லுங்க, ஈழப்பிரச்சினைக்கு என்ன காரணம்?

புதுகை: ஓட்டு அரசியலுக்கு வந்தாச்சு. கம்முன்னு ஈழம், தமிழ் -ன்னு வாய்ச்சவடால் விட்டு ஓட்டு பொறுக்காம எதுக்கு கம்யூநிஸ்ட்டுகள் உண்ணாவிரதம் இருக்கணும்? அதனால வந்த பிரச்சினை தான் இது. எப்படியோ பிரச்சினை ஒரு வழியா தீர்ந்தது. நிம்மதியா இருக்கு அண்ணே!

மாலினி: என்னது பிரச்சினை தீர்ந்ததா? என்ன சொல்றீங்க!

புதுகை: அதான்! பாசில் வந்துட்டு போனாரே! பிரச்சினை தீர்ந்த மாதிரிதான! என்னண்ணே, இல்லன்றிங்களா? (முறைக்கிறார்)

மாலினி: சரி என்னமோ போங்க! பிரச்சினையை யார் தீர்த்தது -ன்னு நினைக்கிறீங்க?

புதுகை: வேற யாரு? எல்லாம், எங்க பாஸ் தான் காரணம்.

மாலினி: (உண்மையில் கடுப்பாகிறார்) இந்த ஒரு தரம் மன்னிச்சிடுங்க புதுகை, இனி உங்கள பேட்டி எடுக்கவே வர மாட்டேன். தயவு செய்து, உங்க பாஸ் எப்படி காரணம் -னு விளக்குறீங்களா?

புதுகை: சரி சரி அழாதீங்க அண்ணே! சொல்றேன். எங்க பாஸ் எனக்கு ஒரு வாரம் லீவு கொடுக்காம இருந்திருந்தா நான் பாசில் -லோட படகு வீட்டுக்கு போய் டேரா போட்டிருக்க மாட்டேன். போகாம இருந்திருந்தா பாசில் அலறி அடிச்சிட்டு டெல்லி வந்திருக்க மாட்டார். ஈழம் பிரச்சினை தீர்ந்திருக்காது அல்லவா?

மாலினி: அண்ணே! உங்க கால காட்டுங்க!!! (மவுன மாகிறார்)

புதுகை: என்னண்ணே! கேள்வி அவ்வளவு தானா?

மாலினி: இன்னும் ஒரு கேள்வி இருக்குண்ணே!

புதுகை: என்ன! "அந்த பாசில் வேற, இந்த பாசில் வேற, அப்பறம் எப்படி உங்க பாஸால பிரச்சினை தீர்ந்தது?" அப்படின்னு கேட்க போறிங்களா?

மாலினி: ச்சே ச்சே! நான் ஏன் அப்படியெல்லாம் கேட்கப்போறேன்! ஏதாவது மொக்கை பதில் இல்லாமையா இருக்கும் உங்க கிட்ட?

புதுகை: புரிஞ்சா சரி! கேளுங்கண்ணே உங்க கடைசி கேள்விய.

மாலினி: "ச்சும்மா ட்டமாஷ்" வலைப்பூ பற்றி உங்கள் கருத்து.

புதுகை: பதிவு தலைப்புல எவன் பேரையாவது போட்டு வம்பிழுக்கறது, எவன் பதிவிலாவது போய் சண்டை வாங்கிட்டு வர்றது -இதெல்லாம் பண்ணாம பதிவு எழுதினா உங்க வலைப்பூ -வை படிக்கிறத பத்தி யோசிக்கலாம்.

Read More......

Thursday, September 25, 2008

புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும் - இறுதி பாகம்

· 48 comments

ண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையின் இறுதி பகுதியை வெளியிடுகிறேன். முதல் பகுதி சென்ற பதிவில்.

தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இனைந்து "சுயமரியாதை-சமதர்ம இயக்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர்.இந்த இயக்கும் தோன்றுவதற்கு முன் 1927 ல் மே தினத்தன்று அவருடைய குடியரசு இதழில் இப்படி எழுதுகிறார்.

"பொதுவாக எனது பிரசங்கத்தில் அரசியல் தலைவர்களை, மதத்தை, குருக்களை, கோவிலை, அரசாங்கத்தை, நீதிஸ்தலத்தை, தேர்தல் அமைப்பை, இன்னும் பிறவற்றை, யார் யாரையோ எதுஎதற்கோ கண்டித்து இருக்கிறேன். நான் கண்டிக்காத திட்டமோ, இயக்கமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படவே மாட்டேன் என்கிறது" என எழுதிய பெரியாரின் கண்களில் பட்டது சிங்காரவேலரின் இயக்கமும், திட்டமும்,யோசனையும்.

இருவரின் கூட்டு முயற்சியால் சுயமரியாதை இயக்கத்தவரிடையேயும், பொதுமக்களிடமும் கம்யூனிசக் கருத்துக்கள் விரிவாக பரவத்துவங்கின. ஈரோட்டுப் பாதை என பின்னால் பெயர் பெற்ற திட்டத்தை சிங்காரவேலரும்,பெரியாரும் உருவாக்கினார்கள்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக "தென்னிந்திய சமதர்ம கட்சி" என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி துவங்கவும் ஏற்பாடு நடந்தது. இதையடுத்து நடந்த கூட்டங்களில் பெரியாரின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதுவரை சாதி, மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு போன்ற சமூக பிரச்சனைகளை மட்டுமே பேசப்பட்ட நிலைமாறி அரசியல், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளும் முன்னிறுத்தப்பட்டன. ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும் போது "பொதுவுடமை அரசுமுறை இந்தியாவில் ஏற்பட என்ன தடை என்று தெரியவில்லை. பொதுவுடமையை ஏன் விரும்புகின்றோம் எனச் சொல்ல பயப்படத் தேவை இல்லை. எல்லோரும் புரட்சிக்குத் தயாராக இருக்க வேண்டும்.பயப்படக் கூடாது. அதனால் என்ன பின்விளைவு ஏற்பட்டாலும் சரி. இதை புரட்சி என்றால் பயப்படாதீர்கள். இது நடக்கும்! நடந்தே தீரும்!" என முழங்கினார்.

இதே நேரத்தில் சிங்கார வேலர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அவர் எழுதிய 'பொதுவுடமை விளக்கம்' என்ற புத்தகத்தில் கம்யூனிசத்தை வெறும் அரசியல்,பொருளாதார சித்தாந்தமாக சுருக்கிக் கூறாமல் சமூகவியல், பண்பாடு போன்ற அனைத்தையும் தழுவிய சித்தாந்தமாக அவர் சித்தரித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா சிங்காரவேலருடன் தொடர்பில் இருந்து தமிழகம் முழுவதும் சென்று சமதர்ம சங்கங்களை அமைக்க வழிகாட்டினார்.

இப்படிப்பட்ட போக்குகள் அனைத்தையும் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு தனது தாக்குதலைத் துவங்கியது. "இன்றைய ஆட்சி ஏன் போக வேண்டும்?" என்ற குடியரசு இதழின் தலையங்கத்தை காரணம் காட்டி பெரியாரையும் அவர் சகோதரி கண்ணம்மாவையும் 1933 டிசம்பர் 30 நாள் சிறையில் அடைத்தனர். பெரியார் சிறைப்பட்ட போதும் அதற்குப் பின்பும் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன்.



பகத்சிங்கின் "நான் ஏன் நாத்தீகன் ஆனேன்" என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தற்காக தோழர் ஜீவாவையும், ஈ.வெ.கிருட்டிணசாமியையும் 1935 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு கைது செய்தது. ஜாமீனில் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கூறியபடி இருவரும் அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். இந்த நிகழ்வு கம்யூனிஸ்டுகளிடையே கோழைத்தனமான செயலாக பார்க்கப்பட்டு பெரியார் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை பெரியார் வெளியிடுகிறார். முதல் அறிக்கை 10/03/1935 அன்றும் இரண்டாவது அறிக்கை 31/03/1935 அன்றும் குடியரசு இதழில் வெளியாயின.


முதல் அறிக்கையில் "மேல்சாதி ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் சாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமே ஆகும். இவற்ரைப் பற்றி பிரசாரம் செய்யவும், அமுல்படுத்தவும் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டீஷ் ஆட்சியே மேலானது என்பது எனது அபிப்ராயம் ஆகும்" என்றார்.


இரண்டாவது அறிக்கையில் "ஈ.வெ.கிருஷ்ணசாமி, ப.ஜீவானந்தம் ஆகிய இரு தோழர்களும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கு நானே ஜவாப்தாரி என அறிவித்துக் கொள்கிறேன். இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும் அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேஸையே பொறுத்தது மாத்திரம் அல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். மக்களுக்கு சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல பொருளாதார கொடுமைகளும் தீர வேண்டியது அவசியம் என நாம் கருதியதால் பொருளாதாரம் சம்மந்தமாக சிறிது பிரச்சாரம் செய்ய ஆரமித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்குமுறைப் பிரயோகம் கொண்டு முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். சர்க்காரோடு இந்த மாதிரி ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சத்தில் சர்க்கருக்கும், நமக்கும் வீண் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்திற்கு வர வேண்டியுள்ளது." எனக் குறிப்பிட்டார்.

அதாவது கம்யூனிச சார்புடைய எந்த இயக்கத்தையும் எப்படியும் அழித்து விடுவது என்ற நிலையில் பிரிட்டீஷ் அரசாங்கம் இருந்ததால் பெரியார் அரசோடு மோதி ஆரம்ப நிலையிலேயே இயக்கம் அழிந்து விடாமல் அரசின் போக்கிலேயே விட்டுப்பிடித்து முதலில் இயக்கத்தை காப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்கு சிங்காரவேலர், ஜீவா மற்றும் பலர் எதிப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் சிங்காரவேலர் 'புதூலகம்' என்ற இதழைத் 1935 மே தினத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்தும் தீவிர கம்யூனுசத்தை வலியுறுத்தியும் கட்டுரைகளை எழுதிவந்தார். பெரியாரின் போக்கை எதிர்த்த ஜீவா போன்றோரும் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் கருவாகி உருவாகும் நேரத்தில் குறைப் பிரசவக் குழந்தையாய் சுயமரியாதை-சமதர்ம இயக்கம் முடிந்து போனது.


மார்க்சியமும், பெரியாரியமும் இனைந்து செயல்படத் துவங்கி சுயமரியாதை-சமதர்ம இயக்கமாக மலர்ந்து வெற்றிகளைக் குவித்து, எதிரிகளை அஞ்சி நடுநடுங்கச் செய்த அந்த அற்புதமான வரலாறு 3 ஆண்டுகளுக்குள் (1933-36) முடிந்து போனது. பெரியாரியமும்,மார்க்சியமும் தொடர்ந்து இனைந்து இருந்தால், மண்ணுக்கேத்த மகத்தான் அந்த இயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தால், அப்போது உருவாகி வந்த எஃகு போன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த இயக்கத்தோடு இனைந்து செயல்பட்டு இருந்தால் ஒரு வேளை தமிழகத்தின் வரலாறே பிரம்மிக்கத்தக்க அளவில் மாறிப்போய் இருக்கும்.

அன்று மக்கள் விருப்பத்தை, மாற்றத்தை கணிக்கத்தவறியதன் விளைவு தான் இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளை பின்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றது. நாட்டில் மதவாதம் பல தரப்பிலும் தலை தூக்கும் இன்றைய நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு சாரார் மட்டுமே மேலும் மேலும் பயனடையும் இன்றைய சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்று பெரும்பான்மையான மக்கள் இன்றும் நல்லெண்னம் கொண்ட இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் நாளுக்கு நாள் தேய்ந்தே போகும் காரணம் என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம். இன்றும் கூலி உயர்வு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்க்கும் வாரியம் அமைத்து குறைந்தபட்சக் கூலியை சட்டமாக்கி வைத்தது திராவிட இயக்கம். இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கின்றது.... என்ன செயவதென்று யோசியுங்கள் தோழர்களே!

(முற்றும்)

Read More......

Wednesday, September 24, 2008

புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும்

· 31 comments

ண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையை வெளியிடுகிறேன்.


"திராவிடம் ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த எழுச்சி!

கம்யூனிசம் ஒரு வர்கத்தின் அறிவார்ந்த கிளர்ச்சி!"

திராவிடமும் கம்யூனிசமும் என்று எழுதத் துவங்கினால் பதிவல்ல,ஒரு புத்தகமே போடலாம். ஆனால் நான் எழுதப்போவது ஒரு பெரிய சைஸ் பின்னூட்டம் தான்.மோகன் கந்தசாமி சொன்னதுபோல ஆராய்ச்சியெல்லாம் கிடையாது. அதுனால தைரியமா மேல படிங்க.

திராவிட இயக்கத்தின் நோக்கங்களுக்கும்,கம்யூனிச இயக்கத்தின் நோக்கங்களுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் இருப்பது இல்லை. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான இயக்கமாகத்தான் இரண்டும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே தங்கள் இயக்கங்களையும் நடத்தின. ஒரே மக்களிடம் கிட்டத்தட்ட ஒத்த கருத்தோடு தங்கள் பணியைச் செய்த இரு இயக்கங்களில் ஒரு இயக்கமான கம்யுனிசத்துக்கு பின்னடைவு.ஆனால் திராவிட இயக்கத்திற்கு இன்றும் போட்டியே இல்லாத நிலை.

கம்யூனிச இயக்கம் தமிழகத்தில் தங்கள் மக்கள் பணியைத் துவங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திமுக துவங்கப்பட்டது.ஆனால் அடுத்த பதினெட்டாண்டுகளில் மக்கள் மனதிலும் ஆட்சியிலும் முதற்பெரும் சக்தியாகி அரியணையில் அமர்ந்தது. ஆனால் தமிழகத்தின் இரண்டாம் பெரும் சத்தியாக இருந்த கம்யூனிச இயக்கம் இன்று எத்தனையாவது சக்தி?

தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தின் மேல் ஈடுபாடும் ஆதரவும் உடைய பலருக்கும் நம்மைப் போலவே போராட்ட குணமும்,சிந்தனையும் உடைய கம்யூனிச இயக்கம் ஏன் பெரிய அள்வில் வளராமலேயே போனது என்ற எண்னம் எப்போதும் உண்டு.



நாடு சுதந்திரம் அடையவிருந்த காலகட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! இன்றைக்கும் காவல்துறையினர் கைவைக்க சற்றே அஞ்சும் அளவிற்கு தீரமுடை ஒரு இயக்கம்! வறுமையையும் கம்பீரத்தோடு எதிர்கொள்ளும் தலைவர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! வீட்டைவிட நாடே பெரியது, அனைத்தையும்விட இயக்கமே பெரிது என்ற எண்ணம் உடையவர்களை மட்டுமே தொண்டர்களாய்க் கொண்ட ஒரு இயக்கம்! சாமானியன் ஒருவன் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும் அவன் சார்பாய் ஒலிக்கும் முதல் குரலை தன் குரலாய் கொண்ட ஒரு இயக்கம் திராவிட இயக்கத்தைவிட எங்கு பின்னடைந்தது என்பதை அறிய சில தத்துவங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உலகின் எந்தப் பிரச்சனையின் மூலமும் இரண்டு தத்துவங்களுக்குள் அடங்கிவிடும். ஒன்று கருத்து முதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம்.( அண்ணே! எங்க ஓடுறீங்க? சும்மா பயப்படாம நில்லுங்க. நானே ஒரு மொக்கச்சாமி. ஆளு மிரண்டு போற அளவுக்கெல்லாம் எழுதவும் வராது,தெரியவும் தெரியாது. முடிஞ்ச அளவு எளிமையாவே விளக்கிடுறேன்)

கருத்து முதல் வாதம்னா வேற ஒன்னும் இல்ல, கருத்துங்கிற வார்த்தைக்கு பதிலா கடவுள்ங்கிற வார்த்தையைப் போட்டுப்பாருங்க.கடவுள் முதல்வாதம்னு ஆகுதா? அவ்வளவுதான் மேட்டரு.அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னு நம்ப பக்தி இலக்கியமெல்லாம் சொல்லுதுல்ல.அதுதான். அதாவது உலகத்துல எந்தப் பிரச்சனை நடந்தாலும், பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய எதிர்த்த வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போனாக்கூட அதுகெல்லாம் காரணம் கடவுள்தான்.ஒருத்தன் ஏழையா இருந்தா அதுக்கு காரணம் ஆண்டவன் அவனுக்கு போட்ட விதி. பணக்காரணா இருந்தா ஆண்டவன் அவனுக்கு போட்ட நல்ல விதி. உழைப்பு,அறிவு,திறமை இந்த மண்ணாங்கட்டியெல்லாம் காரணம் இல்ல. அரைகுறையா விளங்குனமாதிரி இருந்துச்சா? இதுதான் கருத்துமுதல் வாதம்.


பொருள்முதல் வாதம்னா என்ன? பேரே சொல்லுதா என்னான்னு!. அதேதான். எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது பொருளே. பொருட்களின்(பணத்தின்) பங்கீட்டில் எழும் சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் ஆதார சிக்கலாய் உள்ளது என்று சொல்வது பொருள்முதல் வாதம். அதாவது காசேதான் கடவுளடா! அது கடவுளுக்கே தெரியுமடாங்கற கதைதான்.

சரி! இந்த ரெண்டு தத்துவத்துக்கும் தமிழ்நாட்ல கம்யுனிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் வளராமல் போனதுக்கும் என்ன சம்மந்தங்குறீகளா? இருக்கே மேட்டரு! நம்ப காரல் மார்க்ஸ் அண்ணன்( நம்பள பத்திதான் தெரியுமே உங்களுக்கு! நமக்கு எல்லோரும் அண்ணந்தான்) அவர் ஊர்ல உள்ள நடப்ப ஒட்டி சில விஷயங்கள சொன்னாரு.அதை இங்கே உள்ள கம்யூனிஸ்டுகள் நம்ம மண்ணோட தன்மைக்கேறப அணுகவில்லை. மார்கஸ் அண்ணே ஊருல சாதி பேதம் கிடையாது. அங்க ஆண்டான் அடிமை முறை மட்டும்தான். அந்த அடிமையும் தன் உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி கொஞ்சம் காசோ நிலமோ பார்த்துவிட்டால் அடுத்த நொடியே அவனும் ஆண்டான் ஆகிவிடுவான். ஏற்கனவே உள்ள பழைய ஆண்டானும் நம்ப புது ஆண்டானும் இமிடியேட்டா சம்மந்தி ஆயிரலாம்.


ஆனா இங்க பிரச்சனையே வேற! மேல்சாதி,கீழ்சாதி வித்யாசம். நிலமும் காசும் ஆதிக்க சாதிகளிடத்தில். உழைப்பும்,வறுமையும் அடக்கப்பட்ட சாதிகளிடத்தில். இங்க வறுமைங்கிறது சாதியோட சம்மந்தப்பட்டதா இருந்தது.ஒரு சூத்திரன் தனது உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி விட்டால் அவன் மேல்சாதி அந்தஸ்தைப் பெறுவானா என்றால் பதில் எப்போதும் கிடையாது என்பதுதான். எளிய நிலையில் உள்ள ஒரு பிராமணர் லட்சாதிபதியான ஒரு சூத்திரரை விட எப்பொழுதும் அந்தஸ்தில் உயர்ந்தவர்.

அடிமை சாதிகளான பிற்பட்ட தாழ்தப்பட்ட சாதிகள் எந்தக்காலத்திலும் பொருளின் பெயரால் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளமுடியாது. அந்தஸ்தும், கவுரவமும் பிறப்பின் பெயரால் சாதியின் பெயரால் வருபவை. இந்த வித்யாசத்தை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட தவறி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதைத்தான் கையில் எடுத்தது திராவிட இயக்கம்.

கம்யூனிச இயக்கம் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தபோது ஆந்திராவில் இருந்து இங்கு வந்து இயக்கப்பணி செய்த சீனிவாசராவ் போன்ற தோழர்கள் தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களிடையே கூலி உயர்வு பற்றிய சிந்தனையை எழுப்பினர். பின்னர் இவை மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவி தொழிலாளர்கள் இடையே கம்யூனிச இயக்கத்திற்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.

இந்நிலையில் 1925 ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவக்கி கெளரவம் என்பது காசில் பொதுவுடமையாக இருப்பது மட்டும் அல்ல சமூக சமதர்மத்திலும்தான் என்று சுயமரியாதைப் பிரசாரம் செய்யத் துவங்கினார். மனித மனம் இயல்பாகவே விரும்பும் சுயமரியாதையை, ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்து இழந்து போன சுயகவுரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழ் சமுதாயம் வர்க்க பேதமின்றி திராவிட இயக்கத்தின் பின் பெரியார் தலைமையில் மெல்ல மெல்ல அணி வகுக்கத் துவங்கியது.


அப்பொழுதுகூட இந்த மனமாற்றத்தை கம்யூனிஸ்டுகள் உணரவில்லை. அது எப்படி என்பதற்கு ஒரு பெரிய வரலாற்று உதாரணமும் இருக்கு. ஒரு கட்டத்தில் பொதுவுடமை இயக்கமும்,சுயமரியாதை இயக்கமும் கை கோர்த்தன. ஆனால் கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் குறுகிய காலத்திலேயே அக்கைகள் பிரிந்து போயின.

இந்த இடத்தில கம்யூனுஸ்டுகளின் ஆரம்ப நிலையை மிகச் சுருக்கமா பார்த்துவிடுவோம். காங்கிரஸ் கட்சியின் மாநாடு பீகாரில் உள்ல கயாவில் 1922 ம் ஆண்டு நடந்தது. அதில் பங்குபெற்ற "சிந்தனைச் சிற்பி" சிங்காரவேலர் தனது இடி முழக்கத்தால் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தார். அனைவரும் மகாகணம் பொருந்திய என்று பேச்சைத் துவங்கிய போது கிங்காரவேலர் " தோழர்களே" என தன் பேச்சை ஆரமித்தார். " உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இங்கு வந்துள்ளேன்" என மகா துணிச்சலுடன் அறிவித்தார். இதில என்ன துணிச்சல் வேண்டி இருக்குன்னு நினைக்கிறீர்களா? அன்றைய பிரிட்டீஷ் அரசில் யாராவது கம்யூனிஸ்ட்டுன்னு தெரிஞ்சா அவன் வாழ்க்கை அத்தோட தரிசு. இந்தியாவிலேயே நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாகவும் தைரியமாகவும் அறிவித்த முதல் இந்தியர் சிங்காரவேலர்தான்.


இந்தியாவிலேயே உலகத் தொழிலாலர்களின் ஒற்றுமை தினமான "மே தினத்தை" முதன் முதலில் கொண்டாடிய சிரப்பைப் பெற்றவர் சிங்காரவேலர். கொண்டாடிய சிறப்பைப் பெற்ற நகரம் நம்ப சென்னை நகரம். கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் விடத்துவங்கியதை அறிந்த வெள்ளையர் அரசு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சொல்லில் வடிக்க இயலாத அடக்குமுறையை ஏவத்துவங்கியது.

1928 -ம் ஆண்டில் நடைபெற்ற புகழ்பெற்ற இரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு சிங்காரவேலர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு கடும்காவல் தண்டணை பெற்றார். பின் மேல் முறையீட்டில் 2 ஆண்டு ஆக்கப்பட்டு 1930 ல் விடுதலை ஆனார். இதற்கிடையே 1925 ல் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கம் மக்களிடையே முழுமையாக சென்று அடைந்திருந்த நேரம். ஒருபுறம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!மறுபுறம் சமதர்மச் சுடரொளி சிங்காரவேலர்! இரண்டு சரித்திரங்களும் இணைந்தன! பிறந்தது சுயமரியாதை-சமதர்ம இயக்கம்.

(தொடரும்)


பகுதி - 2

Read More......