நண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையின் இறுதி பகுதியை வெளியிடுகிறேன். முதல் பகுதி சென்ற பதிவில்.
தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இனைந்து "சுயமரியாதை-சமதர்ம இயக்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர்.இந்த இயக்கும் தோன்றுவதற்கு முன் 1927 ல் மே தினத்தன்று அவருடைய குடியரசு இதழில் இப்படி எழுதுகிறார்.
"பொதுவாக எனது பிரசங்கத்தில் அரசியல் தலைவர்களை, மதத்தை, குருக்களை, கோவிலை, அரசாங்கத்தை, நீதிஸ்தலத்தை, தேர்தல் அமைப்பை, இன்னும் பிறவற்றை, யார் யாரையோ எதுஎதற்கோ கண்டித்து இருக்கிறேன். நான் கண்டிக்காத திட்டமோ, இயக்கமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படவே மாட்டேன் என்கிறது" என எழுதிய பெரியாரின் கண்களில் பட்டது சிங்காரவேலரின் இயக்கமும், திட்டமும்,யோசனையும்.
இருவரின் கூட்டு முயற்சியால் சுயமரியாதை இயக்கத்தவரிடையேயும், பொதுமக்களிடமும் கம்யூனிசக் கருத்துக்கள் விரிவாக பரவத்துவங்கின. ஈரோட்டுப் பாதை என பின்னால் பெயர் பெற்ற திட்டத்தை சிங்காரவேலரும்,பெரியாரும் உருவாக்கினார்கள்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக "தென்னிந்திய சமதர்ம கட்சி" என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி துவங்கவும் ஏற்பாடு நடந்தது. இதையடுத்து நடந்த கூட்டங்களில் பெரியாரின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதுவரை சாதி, மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு போன்ற சமூக பிரச்சனைகளை மட்டுமே பேசப்பட்ட நிலைமாறி அரசியல், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளும் முன்னிறுத்தப்பட்டன. ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும் போது "பொதுவுடமை அரசுமுறை இந்தியாவில் ஏற்பட என்ன தடை என்று தெரியவில்லை. பொதுவுடமையை ஏன் விரும்புகின்றோம் எனச் சொல்ல பயப்படத் தேவை இல்லை. எல்லோரும் புரட்சிக்குத் தயாராக இருக்க வேண்டும்.பயப்படக் கூடாது. அதனால் என்ன பின்விளைவு ஏற்பட்டாலும் சரி. இதை புரட்சி என்றால் பயப்படாதீர்கள். இது நடக்கும்! நடந்தே தீரும்!" என முழங்கினார்.
இதே நேரத்தில் சிங்கார வேலர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அவர் எழுதிய 'பொதுவுடமை விளக்கம்' என்ற புத்தகத்தில் கம்யூனிசத்தை வெறும் அரசியல்,பொருளாதார சித்தாந்தமாக சுருக்கிக் கூறாமல் சமூகவியல், பண்பாடு போன்ற அனைத்தையும் தழுவிய சித்தாந்தமாக அவர் சித்தரித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா சிங்காரவேலருடன் தொடர்பில் இருந்து தமிழகம் முழுவதும் சென்று சமதர்ம சங்கங்களை அமைக்க வழிகாட்டினார்.
இப்படிப்பட்ட போக்குகள் அனைத்தையும் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு தனது தாக்குதலைத் துவங்கியது. "இன்றைய ஆட்சி ஏன் போக வேண்டும்?" என்ற குடியரசு இதழின் தலையங்கத்தை காரணம் காட்டி பெரியாரையும் அவர் சகோதரி கண்ணம்மாவையும் 1933 டிசம்பர் 30 நாள் சிறையில் அடைத்தனர். பெரியார் சிறைப்பட்ட போதும் அதற்குப் பின்பும் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன்.
பகத்சிங்கின் "நான் ஏன் நாத்தீகன் ஆனேன்" என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தற்காக தோழர் ஜீவாவையும், ஈ.வெ.கிருட்டிணசாமியையும் 1935 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு கைது செய்தது. ஜாமீனில் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கூறியபடி இருவரும் அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். இந்த நிகழ்வு கம்யூனிஸ்டுகளிடையே கோழைத்தனமான செயலாக பார்க்கப்பட்டு பெரியார் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை பெரியார் வெளியிடுகிறார். முதல் அறிக்கை 10/03/1935 அன்றும் இரண்டாவது அறிக்கை 31/03/1935 அன்றும் குடியரசு இதழில் வெளியாயின.
முதல் அறிக்கையில் "மேல்சாதி ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் சாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமே ஆகும். இவற்ரைப் பற்றி பிரசாரம் செய்யவும், அமுல்படுத்தவும் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டீஷ் ஆட்சியே மேலானது என்பது எனது அபிப்ராயம் ஆகும்" என்றார்.
அதாவது கம்யூனிச சார்புடைய எந்த இயக்கத்தையும் எப்படியும் அழித்து விடுவது என்ற நிலையில் பிரிட்டீஷ் அரசாங்கம் இருந்ததால் பெரியார் அரசோடு மோதி ஆரம்ப நிலையிலேயே இயக்கம் அழிந்து விடாமல் அரசின் போக்கிலேயே விட்டுப்பிடித்து முதலில் இயக்கத்தை காப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்கு சிங்காரவேலர், ஜீவா மற்றும் பலர் எதிப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிங்காரவேலர் 'புதூலகம்' என்ற இதழைத் 1935 மே தினத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்தும் தீவிர கம்யூனுசத்தை வலியுறுத்தியும் கட்டுரைகளை எழுதிவந்தார். பெரியாரின் போக்கை எதிர்த்த ஜீவா போன்றோரும் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் கருவாகி உருவாகும் நேரத்தில் குறைப் பிரசவக் குழந்தையாய் சுயமரியாதை-சமதர்ம இயக்கம் முடிந்து போனது.
அன்று மக்கள் விருப்பத்தை, மாற்றத்தை கணிக்கத்தவறியதன் விளைவு தான் இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளை பின்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றது. நாட்டில் மதவாதம் பல தரப்பிலும் தலை தூக்கும் இன்றைய நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு சாரார் மட்டுமே மேலும் மேலும் பயனடையும் இன்றைய சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்று பெரும்பான்மையான மக்கள் இன்றும் நல்லெண்னம் கொண்ட இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் நாளுக்கு நாள் தேய்ந்தே போகும் காரணம் என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம். இன்றும் கூலி உயர்வு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்க்கும் வாரியம் அமைத்து குறைந்தபட்சக் கூலியை சட்டமாக்கி வைத்தது திராவிட இயக்கம். இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கின்றது.... என்ன செயவதென்று யோசியுங்கள் தோழர்களே!